சார் போஸ்ட்

தொழில்நுட்பத்தின் உதவியால் உலகம் இப்போது நம் உள்ளங்கைக்குள்.  எப்போதுமே அவசரகதியில் இயங்கிகொண்டிருக்கிற உலகத்தில் நாமும் நிற்காமல் ஓடிகொண்டே இருக்கிறோம். ஒன்றை கவனித்தீர்களா எந்த காலகட்டத்தில் நாம் இருந்தாலும் ஒரு இருபது வருடங்கள் பின்னோக்கி பயணபட்டால் மனது லேசாகிவிடும். உள்ளம் பரவசமடைந்து அது ஒரு வசந்தகாலம் என்று சொல்ல தோன்றும். இப்போது மட்டுமல்ல நம் பெரியவர்களும் இதையேதான் சொல்ல கேட்டிருப்போம். அவர்கள்  வாழ்ந்த  காலத்தை நினைத்து  பெருமூச்சு விட்டதை கவனித்திருப்போம் . அப்படியானால் காலச்சூழலில் நம் சந்தோசங்களை தொலைத்துக்கொண்டுதான் ஓடிக்கொண்டே இருக்கிறோமா?

அப்படி காலபோக்கில் மறைந்து போன ஒன்றுதான் கடிதம்.
நீங்கள் கடைசியாக எப்போது கடிதம் எழுதினீர்கள்  நினைவிருக்கிறதா? இன்றெல்லாம் கடிதம் எழுதுவது முற்றிலும் குறைந்து அலுவல் நிமித்தமாக மட்டும் என்றளவில் ஆகிவிட்டது. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து தொலைபேசி, கைபேசி போன்ற தொடர்பு சாதனங்கள் கடிதத்திற்கான தேவையை குறைத்திருந்தாலும், ஒரு பழைய கடிதத்தை படிக்க கிடைக்கும் சந்தோசத்தை அது தர முடியுமா? ஒரு பேரன் தன் தாத்தாவுக்கு தப்பு தப்பாக எழுதிய கடிதத்தை கற்பனை செய்து பாருங்கள்!.



பொங்கல் பண்டிகையின் போது பகிர்ந்து கொண்ட வாழ்த்து அட்டைகள் நினைவிருக்கிறதா உங்களுக்கு? எவ்வளவு சந்தோசமான தருணங்கள் அவை!. இப்போது அதை காண முடிகிறதா? கைபேசியில் அனுப்பும் குறுஞ்செய்தியோடு முடிந்துவிடுகிறது பொங்கல் நாட்கள்.



நான் சிருவனாக இருந்தபோது என் இரண்டு அண்ணன்களும் பணி
நிமித்தமாக வெளி மாநிலங்களில் இருந்தார்கள். அவர்கள் எழுதிய
கடிதங்கள் அனைத்தும் ஒரு கொக்கியில் மாட்டப்பட்டிருக்கும்.
வருடம் ஒரு முறை தான் அவர்கள் ஊர் வர இயலும்.
என் பெரியண்ணா ஊர் வரும் முன்னர் எழுதும் கடிதங்களில்
என் அம்மாவுக்கு ஒரு சிறு குறிப்பு எழுதுவார். அதில் அவருக்கு பிடித்த
உணவு வகைகளை பட்டியலிட்டு ஊர் வரும்போது செய்து தருமாறு கேட்டிருப்பார். அந்த கடிதங்கள் தந்த சந்தோசங்கள் காலத்திற்கும்
மிச்சமிருக்கும்.  

பக்கத்து வீட்டு பெரியப்பா , எதிர் வீட்டு பாட்டி , கோடி வீட்டு மாமா இவர்கள் எல்லோரையும் விசாரித்து எழுதி இருப்பார். உண்மையில் அந்த கடிதங்களுக்கு உயிர் இருந்ததை என்னால்
உணர முடிந்தது. மாடு கன்றுகுட்டி ஈன்ற செய்திமுதல்
மல்லிகா அக்கா சீமந்தசெய்தி வரை கடிதங்கள் தாங்கி  சென்ற விசயங்கள் ஏராளம்.

எப்போது கடிதம் எழுதினாலும் நான் எழுதுவதற்கென்று ஒரு அரை பக்கம் மீதம் வைத்திருப்பார் என் அப்பா. கடிதத்தை மடிப்பதற்கு என்று
இருக்கும் பகுதியிலெல்லாம் கூட எழுதுவதற்கு விசயம் இருக்கும்.   

ஒரு சிலருக்கு கடிதங்கள் எழுதிகொடுத்த அனுபவமும் , படித்துகாட்டிய அனுபவமும் எனக்குண்டு. அப்படி நான் எழுதி கொடுத்த கடிதங்கள் யார் வீட்டு பரணிலாவது பத்திரம் ஆகியிருக்குமா? . அது யாருக்காவது செல்லரித்துபோன நினைவுகளை மீட்டு தந்திருக்குமா? அந்த கடிதங்கள் இன்று என்ன நிலைமையில் இருக்கும்? கற்பனைக்கு எட்டாத கேள்விகள் தான்.

என் நெருங்கிய நண்பர் ஒருவர் எனக்கு ஒரு முறை ஒரு நீண்ட கடிதம்
எழுதியிருந்தார்.  ஆனால் அவர் அதை அனுப்பியிருக்கவில்லை. ஒருமுறை எதேச்சையாக சந்திக்க நேர்ந்தபோது , உனக்கு ஒரு கடிதம்
எழுதிகொண்டிருந்தேன் என்றார். ஆர்வமிகுதியில் தாருங்கள் என்று
வாங்கி பார்த்தேன். ஐந்து பக்கங்கள் எழுதி முடித்துவிட்டு இன்னும்
எழுதுவதற்காக வைத்திருந்தார். அருமையான ஒரு பயணம் போன்ற
அனுபவத்தை தரும் கடிதம் அது.கையோடு வாங்கிவந்து இன்னும்
பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

எவ்வளவு உணர்ச்சிகளையும், மனதின் வெளிப்பாடுகளையும் கொண்டு
சேர்த்திருக்கிறது இந்த கடிதங்கள். கடிதங்கள் போல நம்
எண்ணங்களை அப்படியே  கொண்டு சேர்க்க வேறெதுவும் இருப்பதாய்
எனக்கு தோன்றவில்லை.

கடிதங்களுக்கு   இப்போது கல்லறை கட்டப்பட்டுவிட்டது. கண்ணீரோடு போய்வா என்று சொல்வதை தவிர வேறொன்றும் எனக்கு தெரியவில்லை. நீ இன்னொரு பிறவி எடுத்துவருவாய்
என்று என் மனம் மட்டும் ஏனோ இன்னும் நம்பிக் கொண்டிருகிறது.
வருவாயா???    

                                                                              வருவாய் என்ற நம்பிக்கையோடு
                                                                               பாலகுமாரன்
                                                                               22/12/2012