குருகுலம்

நண்பர்களே ,

இதோ என் முதல் பதிவு என் குருவிற்காக!!

ஒரு ஞாயிற்றுக் கிழமை  அதிகாலை 5.30 மணி இருக்கும். எனது தூக்கம் கலைந்திருந்தது. புரண்டு படுத்து  திரும்ப தூங்க முயன்று தோற்று போனேன். மனது எங்கோ பின்னோக்கி பறந்து ...........ஒரு நிமிடம்!!,  எப்படி நம் மனது ஒரு இசைதட்டில் பொதிந்திருக்கும ஒரு பாடலை தேர்வு செய்து இசைப்பது போல எதையாவது ஒன்றை நம் நினைவுகளிலிருந்து தேர்ந்த்தெடுத்து  அசை போடுகிறது நம் அனுமதி இல்லாமல்!! அப்படித்தான் என் எண்ணங்கள் எனது ஆசிரியர் சுகுமார்  (எ) சுந்தர்ராஜனை
பற்றி அசை போட்டு கொண்டு இருந்தது. இதோ எழுந்து உட்கார்ந்து எழுத ஆரம்பித்துவிட்டேன்.

அவரை எப்படி அறிமுகப்படுத்துவது. அவர் எங்களது பள்ளி ஆசிரியர் அல்ல.
நான் ஓன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படித்தபோது எங்களுக்கு   டியூஷன் எடுத்தார்.
சுகுமார் சார்  ஒரு வித்தியாசமான மனிதர் . அவர் பிறப்பால் ஒரு பிராமணர். எப்போதும் ஜாலியாக இருப்பார். கண்களுக்கு Ray-Ban கண்ணாடி அணிந்து  ஸ்டைலாக வலம்வருவார். கமலஹாசனின் பரம விசிறி.
தேவர்மகன் திரைப்படம் வந்த போது அவர் கமல் போல மீசைவைத்திருந்தார்.
பின் அதுவே அவரின் அடையாளமானது. அவரின் சுறுசுறுப்பிற்கு
இணையாக இன்றுவரை என்னால் யாரையும ஒப்பிட முடியவில்லை.
பள்ளிக்கு கூட போக பிடிக்காமல் இருந்தது உண்டு. ஆனால் ஓருபோதும் டியூஷனுக்கு  மட்டம் போட  நினைத்ததில்லை.

1990 க்கும் 1993 க்கும் இடைப்பட்ட காலம் அது. கிட்டத்தட்ட குருகுலம் போன்று தான்  இருந்தது நங்கள் அவரிடம் படித்தது. நாங்கள் பள்ளியில் இருந்த நேரத்தை விட டியூஷன் சென்டரில் இருந்த
நேரம் தான் அதிகம். அவரிடம் தான் கமலஹாசனை ரசிக்க கற்றுக்கொண்டேன். கிரிக்கெட் விளையாட கற்றுக்கொண்டேன்
பைக் ஓட்ட கற்றுக்கொண்டேன்.

விளையாட்டு போலவேதான் இருந்தது எங்களது படிப்பு. நிறைய பெற்றோர்களுக்கு நங்கள் எங்கே உருப்பட போகிறோம் என்ற கவலை கூட இருந்தது. ஏனென்றால் சுகுமார் சீட்டு ஆடுவார் , சிகரெட் புகைப்பார். கிரிக்கெட் மீது  பைத்தியம்.  நடந்து போகும் போதுகூட காதில் ரேடியோ வைத்து கிரிக்கெட்  கமெண்ட்ரி கேட்டு கொண்டு போவார். ஆனால் ஒருபோதும் எங்களின் ஒழுக்ககேட்டை சகித்து கொண்டதில்லை.

அவர் ஒரு  பள்ளியில்(அய்யம்பட்டி) சத்துணவு ஆசிரியராகவும் பணியாற்றினார். சனி ஞாயிறு -களில் அந்த பள்ளியில் தான் எங்களது டியூஷன். மதியம் வரை பாடம் இருக்கும். பின்னர் மாலை முழுவதும் விளையாட்டுதான்   பாரதி சொல்லி வைத்தது போல. கிரிக்கெட், குண்டு விளையாடுதல் , கிணற்றில் நீச்சல் அடித்தல் . பின் எப்படி கசக்கும் இந்த டியூஷன். இதோ என் நண்பர்களை நினைவுகூற ஒரு சந்தர்ப்பம். அய்யம்பட்டி செல்வம்,  ரேணு கோபால், செம்பாறை விசு , MP பழனிச்சாமி, நாகராஜ், வடகம்பாடி ரமேஷ் . சீனியர் செட்டில் விசு , முத்துசாமி , பொன்னாமலை  இன்னும் பலர்.

முழு ஆண்டு தேர்வு நெருங்கும்போது அவர் வீட்டில்(நொச்சிப்பட்டி)  நைட் ஸ்டடியும் இருக்கும். சைக்கிளில் சென்றுவிட்டு
காலையில் தான் திரும்புவோம்.
இரவு படித்து முடித்து விட்டு ஈசனத்தம் (அருகில் இருக்கும் சின்ன டவுன் ) டெண்டில் இரவுக்காட்சி  சினிமா கூட  பார்த்ததுண்டு. அங்கிருந்து 6 கிலோமீட்டர் சைக்கிளில் சென்று வருவோம். இப்போது சொல்லுங்கள்  எங்களது பெற்றோர்களிடம் இருந்த பயம் நியாயம் தானே.

அதற்காக நாங்கள் படிக்காமல் இருந்து விடவில்லை.
நாங்கள் படித்தது ஒரு அரசினர் பள்ளியில்(R வெள்ளோடு). எனக்கு தெரிந்து ஒரு வருடம் 10th ரிசல்ட்-ல்  வாஷ் அவுட் ஆனது கூட உண்டு. அந்த காலகட்டத்தில் அந்த நிலைமையிலிருந்து பள்ளியை
மீட்டெடுத்தவர் சுகுமார் சார் தான்.
மாற்று கருத்து இருந்தால் மன்னிக்கவும்.

டியூஷன் என்றால் ஏதோ கணிதம் ஆங்கிலம் மாத்திரம் அல்ல. எல்லா பாடங்களுக்கும் அவர்தான். கடைசிவரை அவர் என்ன படித்திருந்தார் என்று எங்களுக்கு(எனக்கு) தெரியாது. அவர் ஒரு சகலகலா மேதாவி.
அன்று நடத்தியவரை வினாடிவினா இருக்கும். கிட்டத்தட்ட அது ஒரு பெரிய போர்க்களம் போல தான் இருக்கும். இரண்டு குழுவாக பிரித்து கரும்பலகையில் மதிப்பெண் இடுவார். வெற்றி பெறுபவர்களுக்கு பேனா , பென்சில் என்று எதாவது பரிசளிப்பார்.  ஒன்று சொல்ல ஆசை படுகிறேன்.
அவருக்கு கற்றுதருதலில் கண்டிப்பாக ஒரு காதல் இருந்தது.

மாலையில்  R .வெள்ளோடு பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் ஆடுவோம். அவரும் எங்களுடன் சேர்ந்து ஆடுவார். அவருடன் சேர்ந்து நிறைய கிரிக்கெட் பார்த்ததும் உண்டு.
இதற்காகவே அவர் வீட்டில் டிஷ் ஆண்டெனா இருந்தது. ஊருக்கு ஒரு தொலைகாட்சி இருந்த காலம் அது.

பத்தாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வுக்கு நாங்கள் குஜிலியம்பாறை 15 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் இன்னொரு பள்ளிக்கு சென்று தேர்வு எழுதவேண்டும்.
எல்லா தேர்விற்கும் எங்களுடன் வருவார். கடைசி நிமிட படிப்புக்கு உறுதுணையாக இருப்பார். 

தேர்வுக்கு இடையே அவருக்கு ஆன சிறிய விபத்தால் கணித தேர்விலிருந்து
அவரால் எங்களுடன்  வர இயலவில்லை. கணித தேர்வு முடித்ததும் அவரை  வீட்டில் சென்று பார்த்தோம். எல்லா தேர்வுகளையும் எழுதி முடித்துவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தோம்.

அந்த நாளும் வந்தது. அப்போதெல்லாம் மாலைமலர் அல்லது மாலைமுரசு
நாளிதழில் தான்தேர்வு முடிவுகள் வெளியாகும்.
சுகுமார் சாரின் உழைப்பு வீண்போகவில்லை. முடிவுகள் வந்தபோது 90 விழுக்காடுக்கு மேல் தேர்வாகி இருந்தார்கள்.இருவர் மட்டும் தேர்வாகவில்லை. அவர்களிருவரும் இவரிடம் படிக்கவில்லை.

மறுநாள் தலைமை ஆசிரியர் மதிப்பெண் அறிவித்தார். முதல் மதிப்பெண் 403  என்றும் கணிதத்தில் ஒருவர்  100 க்கு 100 மதிப்பெண் என்றும் சொன்னார்.
அந்த இரண்டையும் பெற்றது நான் தான் என்பதை அறிந்தபோது அளவற்ற மகிழ்ச்சி.

கணிதத்தில் நிறைய பேர் ஓரிரு மதிபெண்ணில் சென்டம்(முழுமை)  தவற
விட்டிருந்தினர். சுகுமார் சார் சந்தோஷத்தில் திளைத்தார். இதிலென்ன சாதனை இருக்கிறது? உங்கள் கேள்வி நியாயமானதுதான். 30 ஆண்டு கால பள்ளி வரலாற்றில் இது போன்ற ரிசல்ட் அதுவே முதல் முறை.
இவர்கள் எங்கே உருப்பட போகிறார்கள் என்றவர்களின் முன்னால் காலரை தூக்கிவிட்டு கொண்டு நடந்தோம்.

எங்கள் முன் எந்த லட்சியமும் முன்னிருத்தபடவில்லை. உண்மையை சொல்ல போனால் தேர்வு எழுதி முடிக்கும் வரை 100 எடுப்பேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை நான் . சத்தியமாய் சொல்கிறேன் சுகுமார் சார், இது நீங்கள் எடுத்த மதிப்பெண்.

அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அதை விட நல்ல ரிசல்ட் தந்து ஆச்சரியப்படுத்தினார். வேறு பள்ளிக்கு நான் சென்று விட்டாலும் நேரம் கிடைக்கும்போது சென்று
அவருடன் கிரிக்கெட்  ஆடுவேன்.

இவ்வளவு வெற்றியை தந்த அவருக்கு எதாவது செய்ய வேண்டும் என்று
நினைத்த போது  கூட என் நினைவிற்கு வந்தது சிகரெட் தான். ஒரு நாள் R.வெள்ளோடு பள்ளி மைதானத்தில் கிரிக்கெட்
ஆடிகொண்டிருந்தபோது  ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கிவந்து கொடுத்தேன். முகமலர்ச்சியுடன்
ஏற்று கொண்டார்.

அவரின் ஆயுளை குறைத்ததில் எனக்கும் ஒரு துளி அளவாவது
பங்கு உண்டு என்பதை   உணர்ந்தபோது மனது வலித்தது. ஆம் ஒரு தேனீ போன்ற சுறுசுறுப்புடன் சுற்றிக்கொண்டு இருந்த சுகுமார் சார் இனி இல்லை
என்று என் நண்பர்கள் சொல்ல கேட்ட போது உடைந்து விட்டேன்.
2010 -ஆம் வருடம்  ஒரு பிப்ரவரி நாளில் அவரை காலன் அழைத்துகொண்டான். இடைவிடாத புகைபழக்கம் அவரை இவ்வளவு சீக்கிரம் பிரித்துவிடும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.

கொஞ்ச நாள் கழித்து  நானும் செல்வமும் சென்று சுகுமார் சாரின் தாயார் ,
மற்றும் துணைவியாரை பார்த்துவர சென்றோம். அழுதுகொண்டே பேசிய அந்த தாய்க்கு சமாதனம் சொல்ல எங்களிடம்
வார்த்தைகள்  இல்லை. அங்கு மௌனம் மட்டும் தான் எங்கள் மொழியானது.

இன்னும் கூட நீங்கள் இந்த உலகத்தில் இல்லை என்பதை மனது ஒரு தயக்கத்துடனே தான் ஏற்று கொள்கிறது.

எனக்கு கடவுள் நம்பிக்கை குறைவு என்றாலும் உங்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் குருவே!!!

கமல்ஹாசனின் ஒரு நல்ல படம் பார்க்கும்போதும் , இந்தியா கிரிக்கெட்டில் உலக கோப்பையை வென்ற போதும் உங்கள் முகம் மின்னல் போல் ஒரு நொடி வந்து போகாமலில்லை..
                                                                                                                  
                                                                                      என்றும் உங்கள்  நினைவுகளுடன்
                                                                                      பாலகுமாரன்
                                                                                      30/09/2012








.



  

பட்டாம்பூச்சி!!!



நண்பர்களே , இதோ நானும்

எங்கோ  தொலைந்துவிட்ட நினைவுகளை

தூசி தட்டி புரட்டி பார்க்க எனக்கு கிடைத்த சந்தர்பம் .....

நாம்  எழுதிய நாட்குறிப்பை நாள்கடந்து படிக்கின்ற சந்தோஷம் ....

பல வருடம்  கழித்து பார்த்த

கல்லூரி நண்பனின் கதைத்தலில் கிடைக்கின்ற ஆனந்தம்.....

பார்த்தவை, கேட்டவை, ரசித்தவை பகிர்தலுக்கு கிடைத்த பட்டாம்பூச்சி


இனிமேல் எப்போதாவது உங்கள் வீடுவரை வந்துவிட்டு போகும்!!!


                                                                                                               - பாலகுமாரன்
                                                                                                                  22/09/2012