எதிர்பாட்டு


சில சமயங்களில் சின்ன சின்ன சம்பவங்கள் கூட மறக்க முடியாத நினைவுகளாகி விடும்.
அதுவும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு, நட்சத்திரங்கள் வானில் சிதறி கிடப்பது  போல எண்ணிலடங்கா நினைவுகள் சிதறுண்டு  கிடக்கும். என்னுடைய ஊர் திண்டுக்கல் மாவட்டத்தில்  பொன்னம்பட்டி என்ற குக்கிராமம்.  எல்லோரும் ஏதோ ஒரு வகையில் சொந்தங்களாக இருப்பார்கள். எதிர்படுபவர்களை மாமாயி(மாமா),  அண்ணா, சின்னாயி(சித்தி), பெத்தியா(பெரியப்பா) என்று உறவு சொல்லி அழைத்து இரண்டு நிமிடங்கள் நின்று  பேசாமல் போக முடியாது. வீடுகளில் எல்லாம் தெலுங்கு தான் பேசுவார்கள். எங்கள் தலை முறையில் தான் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக
ஆட்கொண்டு விட்டது.

நிறைய பண்ணையகாரர்களும் பண்ணையங்களும் எங்கள் ஊரில் இருந்த காலம்.
சுமாராக 80க்கும் 90க்கும் இடைப்பட்ட காலம். ஒவ்வொரு பெரிய பண்ணயதிற்கும் பண்ணையாள் ஒருவர் வேலைக்கு இருப்பார். ஒரு சில
பெரிய பண்ணையங்களில் பண்ணையாளை  குடும்பத்துடன் வேலைக்கு
அமர்த்தியிருப்பார்கள். தோட்டங்களிலேயே பண்ணையாட்களின் குடும்பத்திற்கு வீடு இருக்கும்.

கிட்டத்தட்ட முழுநேர (24/7) வேலைதான். பகலில் ஆடு மாடுகளை மேய்த்து
பட்டியில் அடைத்து விட்டு இரவு தோட்டத்தில் தண்ணீர்  பாய்ச்சுவார்கள். நள்ளிரவு தாண்டி பின்னிரவு நேரங்களில் தான் பம்பு செட்களுக்கான  3 phase மின்சாரம் இருக்கும் என்பதால் அதுவே அந்த வேலைக்கான  சரியான தருணமாக இருந்தது.


பின்னிரவு நேரங்கள் தான் எல்லோரும் அயர்ந்து தூங்கும்  நேரம்.  இந்த நேரங்களில் தனியே  விழித்து வேலை செய்வது என்பது ஒரு தண்டனை தான். சின்னதாக சரக் என்று சத்தம் கேட்டாலும் உயிர்  போய் உயிர் வரும் .
பாம்பாக இருக்குமோ இல்லை வேலியில் மேயும் ஒடக்கானாக இருக்குமோ என்று மனது அச்சப்பட்டு பின் ஆறுதல் சொல்லிக்கொள்ளும் .
சின்ன வயது முதல் கேட்டு படித்து  நம்பிய நம்பாத பேய் கதைகளெல்லாம் ஞாபகத்தில் வந்து பயமுறுத்தும் . தூக்கமும்  வந்து  கண்ணை  கட்டும்.

இந்த பயத்தையும் தூக்கத்தையும் விரட்டி அடிக்க இந்த பண்ணை ஆட்கள்
கையாண்ட யுக்தி என்னை மிகவும் கவர்ந்தது. பக்கத்து பக்கத்து தோட்டங்களில் தண்ணீர் பாய்ச்சும் இருவர் சேர்ந்து கொண்டு பாடல்கள் பாடி அசத்துவார்கள். பக்கத்து தோட்டம் என்றால் அரை கிலோமீட்டர் முதல்
ஒரு கிலோமீட்டர் இடைவெளி இருக்கும்.

ஒருவர் இங்கிருந்து பாட அதைகேட்டு இன்னொருவர் எதிர்பாட்டு பாடுவார். திரைப்பட பாடல்களும் சில நேரம் மேடை நாடக பாடல்களும் எடுத்து விடுவர்.
உற்று கேட்டால் இருவரின் பாடல்களிலும் நையாண்டியும்  நக்கலும் ஒளிந்து இருக்கும்.  நேரம் ஆக ஆக அந்த பாடல்களில் இவர்களின் சொந்த மெட்டுகளும் வரிகளும் கலந்து  கேலி பேசும். அவர்களின் தூக்கம் விரட்டி நம் தூக்கத்தையும் கலைத்து விடுவார்கள்.

காலபோக்கில் விவசாயமும் நலிந்து  பண்ணையாட்களும் நகரப் பணி தேடி ஓடியதில் இதை நான் கதையாக சொல்ல வேண்டிய நிர்பந்தம்.

இன்னும் பேசலாம் .... 

4 comments :

ish said...

super enaku romba pidichi iruku how to post like this

Unknown said...

இனிமையாக இருக்கிறது

பா.பாலகுமார் said...

நன்றி ஜே தா

Unknown said...

Nice one mams, I do remember those days. Great memories..

Post a Comment