என்ன செய்து கொண்டிருக்கிறோம் வானம்பாடியில்?



வானம்பாடி பசுமை இயக்கம்

மாற்றம் என்பது சொல் அல்ல செயல்  
-கோ.நம்மாழ்வார்



என்ன  செய்து கொண்டிருக்கிறோம்  வானம்பாடியில்?

ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஆகியிருக்கும் வானம்பாடி அமைப்பை துவக்கி. திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களின் எல்லைகளில் அமைந்திருக்கும் R .வெள்ளோடு மற்றும் ஈசநத்தம் கிராமங்களில் வறட்சியின் பிடியால் அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை மேம்படுத்தவும் , நிலத்தடி நீராதாரங்களை காக்கவும் வானம்பாடி பசுமை இயக்கம் பணியாற்றிக்கொண்டிருக்கிறது.

வானம்பாடி பசுமை இயக்கத்தின் நோக்கங்கள் 

மழை நீர் சேகரிப்பு, நிலத்தடி நீராதாரங்களை மேம்படுத்துதல் அவற்றை பாதுகாத்தல், நீர்மேலாண்மை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

பசுமையாக்கம் - மரம் நடுதல் , அவற்றை பராமரித்தல் மற்றும் மரம் நடுதலை ஊக்குவித்தல் 

இயற்கை விவசாயத்தையும், நஞ்சில்லாத விவசாயத்தையும் முன்னெடுத்தல் மற்றும் அதை பரவலாக்குதல்.

இப்படி இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால் இவற்றில் எல்லாவற்றுக்கும் முதன்மையானது நீராதாரங்கள்.  அதற்கான முயற்சியில் முதல் அடி எடுத்து வைத்திருக்கிறோம்.   

இதுவரை  ...

நீரின்றி அமையாது உலகு . விவசாயம் உட்பட பல்வேறு பயன்பாடுகளுக்காக நாம் நிலத்தடி  நீராதரங்களை பயன்படுத்தும் அளவிற்கும் , மழை பெய்து நீராதாரங்கள் தங்களை புதுப்பித்து கொள்வதற்கும் மிகப்பெரிய இடைவெளி உண்டாகிவிட்டது. 
அதனால் நிலத்தடி நீர்மட்டம் 100 அடி 200 அடி என்ற அளவிலிருந்து 500 அடி 1000 அடிக்கு மேல் கீழே சென்றுவிட்டது. 
இதற்கு பல காரணங்களை சொல்லலாம். பிரதானமாக மனிதர்களின் அறியாமையும் ,  பேராசையும்  அதனால்  ஏற்பட்ட சுற்றுசூழல் சீர்கேட்டையும் காரணமாக சொல்லலாம்.

காரணங்களை தேடிக்கொண்டும் , குற்றம்  சுமத்திகொண்டு  இல்லாமல் இதை எப்படி சரி செய்வது , அதிலிருந்து  தப்பி பிழைப்பது என்று யோசித்தபோது திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியாளர் திரு.X.பிரிட்டோராஜ் அவர்கள் தமிழகமெங்கும் பயணம் செய்து நீர் மேலாண்மை  தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு பயிற்சியாக அளித்து வருவது தெரியவந்தது.
அவரை அணுகி R.வெள்ளோடு பகுதியில் "நீர்மேலாண்மை  மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம்"  என்ற தலைப்பில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஈசநத்தம் பகுதியிலும் அவரை வரவழைத்து அதே போன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 500 விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பண்ணைக்குட்டைகள் அமைத்து மழைநீரை சேகரிப்பதன் அவசியம் மற்றும் பல்வேறுவிதமான சொட்டுநீர் பாசன முறைகள் குறித்தும் பயிற்சியளித்து விவசாயிகளிடையே பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்.
R .வெள்ளோடு நிகழ்வில் திரு.பிரிட்டோராஜ் அவர்களுடன் 
ஈசநத்தம் நிகழ்வில்  திரு.பிரிட்டோராஜ் & திரு கந்தசாமி  அவர்களுடன் வானம்பாடி அமைப்பினர் 

அதோடு மட்டுமில்லாமல் வேளாண்பொறியியல்  துறையின் மூலம் அரசு  மானியத்துடன்   15 பண்ணைக்குட்டைகள் அமைக்க  அனுமதி பெற்று தந்தார். 

 தற்போது ..

 R.வெள்ளோடு  மற்றும் அருகில் இருக்கும் கிராமங்களில் பண்ணைக்குட்டை அமைக்க விருப்பம் தெரிவித்தவர்களின் விபரங்கள் சேகரித்து வேளாண் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டது.   

தற்போது 10 பண்ணை குட்டைகளுக்கான பணிகள் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கிறது .
R.வெள்ளோடு, திருக்கூர்ணம், ஆலம்பாடி மற்றும் கோட்டநத்தம் கிராமங்களுக்கு இந்த குட்டைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொன்றும் 100 அடி X 100 அடி நீள அகலத்துடன் 5 அடி ஆழம்  என்ற  அளவில் அமைக்க வேண்டும்.  4 அடி உயரம் கரை அமைக்க வேண்டும்.  ஒவ்வொரு குட்டைக்கும் 25 ஏக்கர் அளவில் நீர்ப்பிடிப்பு பகுதிகள் இருக்குமாறு பார்த்து வேளாண் அதிகாரிகள் இடத்தை தேர்வு செய்து கொடுத்திருக்கிறார்கள்.  நல்ல மழைப்பொழிவு  இருந்தால் ஒவ்வொரு குட்டையிலும் தோராயமாக 20 லட்சம் லிட்டர் மழை நீரை சேகரிக்க முடியும். 15 குட்டைகளும் அமைத்துவிட்டால் 3 கோடி லிட்டர் மழைநீரை கிராமங்களின் பல்வேறு இடங்களில் சேகரிக்க முடியும். இதன் மூலம்  நிலத்தடி நீர் மட்டம் உறுதியாய் உயரும் என்று நம்பலாம். 

வானம்பாடி அமைப்பிலிருந்து  இந்த பணியினை ஆரம்பத்திலிருந்து ஆர்வம்  குறையாமல் அதிகாரிகளுடனும் விவசாயிகளிடமும்  பேசி ஒருங்கிணைத்து சாத்தியப்படுத்தியவர் அய்யம்பட்டியை சேர்ந்த சௌந்தர். இந்த பணியினை மேற்பார்வையிட்டு வழிகாட்டிக்கொண்டிருப்பவர் வேளாண் அதிகாரி திரு. சேதுராமன் அவர்கள். அவர்கள் இருவருக்கும் வானம்பாடி பசுமை இயக்கத்தின் சார்பாக நமது  நன்றிகள்.

  
திரு .செழியன் தோட்டத்தில் 

திருமதி.பசுங்கொடி தோட்டத்தில் 

திரு.பொன்னாமாலை தோட்டத்தில் 

திருமதி.ராஜேஸ்வரி தோட்டத்தில் 

திரு.ராமானுஜம் தோட்டத்தில் 
திரு.வரதராஜ்  தோட்டத்தில் 




இனிமேல்....

மத்திய அரசின்  திட்டமான   விவசாயிகளுக்கான இயற்கை வேளாண்மை குழு  சான்றிதழ்   திடடத்தில்  இணைந்து 
R .வெள்ளோடு மற்றும் மல்லபுரம் ஆகிய பகுதிகளில் 20 உறுப்பினர்களை  கொண்ட இரண்டு இயற்கை விவசாய குழுக்கள் அமைக்கப்படவிருக்கிறது . இரு குழுவிலும் சேர்த்து மொத்தம் 100 ஏக்கர் நிலங்களில் இயற்கை விவசாயத்திற்கு நிலத்தை பண்படுத்தி காய்கறி  பயிர்கள் பயரிடவேண்டும்.  முடிவில் குழுவில் இருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும்  அரசு  ஆர்கானிக் சான்றிதழ் வழங்கும்.

அடர்வனம் அமைத்து பராமரித்தல் 

நம் பகுதிகளை பசுமை ஆக்குதல் என்பது வானம்பாடியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.  அதற்காக நம் பகுதிகளில் இரண்டு அடர்வனங்கள் (ஜப்பானிய மியாவாக்கி முறையில் அமைக்கப்படும் காடு) அமைக்கலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு அடர்வனமும் 18 லிருந்து  20 சென்ட் பரப்பளவில் பலவகைப்பட்ட மரங்களை கொண்டதாக இருக்கும்.  இந்த அடர்வனங்களை சொட்டுநீர் பாசனம் அமைத்து பராமரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் .   

எங்கோ நான் படித்தது நினைவிற்கு வருகிறது. இந்த பூமி ஒரு வாடகை வீடு போன்றது . நமக்கு எப்படி நம் முன்னோர்கள் நம்மிடம்  கொடுத்து சென்றனரோ, அதேபோல நாம்  நம்  தலைமுறை பிள்ளைகளுக்கு  விட்டுச்செல்ல வேண்டிய  பொறுப்பு நம்  எல்லோருக்கும் இருக்கிறது .  இதற்கு வானம்பாடி ஒரு பாலமாக இருக்கும் என்று நம்பலாம்.

நம்பிக்கையுடன் 
பா.பாலகுமார் 
வானம்பாடி பசுமை இயக்கம்  












0 comments :

Post a Comment