குருகுலம் - என்னை செதுக்கிய சிற்பி

குறள் 102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது                                                
விளக்கம்
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.

 

குருகுலத்தின் தொடர்ச்சியாக அய்யாவு அய்யாவை பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்து இதோ இப்போது எழுதுகிறேன. இன்னொரு குருகுலம்  போலவே அமைந்தது என்னுடைய அரவக்குறிச்சி பள்ளி வாழ்வும். 90-களின் ஆரம்பத்தில் 10-ஆம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் First குரூப் (உயிரியல், கணிதம்) எடுத்து படிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் அரவக்குறிச்சி மேல்நிலைப்பள்ளியில் மட்டும் விதிவிலக்காக இயந்திரவியல்(Vocational Stream)  பாடபிரிவு முதன்மையானதாக இருந்தது.  அதற்கு காரணம் அய்யாவு அய்யா.

அரவக்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளியில் இயந்திரவியல் துறையின் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். சர்தார் வல்லபாய் படேலை  போன்ற  இரும்பு மனிதர் அய்யாவு அய்யா. அவருக்கென்று கொள்கைகளோடும் அதி மிகுந்த ஈடுபாட்டுடனும் பணியாற்றியவர். மிகவும் கண்டிப்பானவர். இன்றளவும் அவரை நினைக்கும் பொது ஒரு சின்ன பயமும் மரியாதையும் வந்து போவதில் ஆச்சர்யம் இல்லைதான்.

நான் படித்த காலகட்டத்தில் இரண்டு முறை மாநில அளவில் முதலாம் இரண்டாம் இடங்கள் 12ஆம் வகுப்பில் பெறுவதற்கு காரணமாக இருந்தார். பொறியியல் கல்லூரிகள் குறைவாக இருந்த அந்த கால கட்டத்தில் இவரிடம் படித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் முதலான நல்ல பொறியியல் கல்லூரியில் பயின்றனர்.

நான் அந்த பள்ளியில் சேர்ந்த முதல் நாள், மேல்நிலை முதலாம் ஆண்டு சேர்க்கை முடிந்து எல்லோரும் ஒரு பயத்துடனும் படபடப்புடனும் அமர்ந்திருந்தோம். என்னைபோலவே  நிறைய மாணவர்கள் வேறு பள்ளியில் இருந்து வந்திருந்தார்கள். மிடுக்கான நடையுடன் வந்தமர்ந்து வருகை பதிவை முடித்துவிட்டு முதல் வகுப்பை ஆரம்பித்தார். அய்யாவு அய்யாவின் முதல் வகுப்பு காலத்துக்கும் வழி காட்டும் பாடமாக இருந்தது..

பதின் பருவ மனது எப்படி எல்லாம் திசை மாறும். எதற்கெல்லாம் ஆசைப்படும். எப்படியெல்லாம் முடிவெடுக்கும். காட்டாற்று வெள்ளம் போன்ற நம் மனதை வென்று எப்படி கரை சேர வேண்டும் என்பதுதான் பாடம். உண்மையில் எங்களில் பலருக்கும் அந்த வகுப்பு ஒரு திருப்புமுனை என்றே சொல்வேன். அதை போன்ற பாடம் இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பலமுறை நினைத்திருக்கிறேன்.

உண்மையில் நாம் ஒழுக்கம் கெட்டு , பண்பு தவறி நம் வாழ்வை சீரழித்துக்கொள்ள நாம் ஒன்றும் மெனக்கெட தேவையில்லை. அதற்கான வாய்ப்புகள் எப்போதும் நம் வாயிற்கதவை தட்டிக்கொண்டே இருக்கும். நாம் அதை எப்படி கடந்து  செல்கிறோம் என்பதில் தான் நம் வாழ்வியல் பாடம் ஒளிந்திருக்கிறது என்று எங்களுக்கு உணர்த்தியவர் அய்யாவு அய்யா.

எங்களை சீர்படுத்திக்கொள்ள அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்கி கொடுத்தார். எங்கள் இயந்திரவியல் துறைக்கென்று தனியாக நூலகம் இருக்கும். அதில் எங்களின் பொது அறிவை  வளர்த்துக்கொள்ள கல்கண்டு , முத்தாரம் போன்ற தமிழ் சஞ்சிகைகளும் , Readers Digest, Wisdom போன்ற ஆங்கில இதழ்களும் ஒவ்வொரு மாதமும் வந்து சேரும். இன்னும் கூட இதையெல்லாம் அவர் சொந்த செலவில் செய்தாரா இல்லை பள்ளி நிதியிலிருந்து செய்தாரா என்று எனக்கு தெரியாது.

அது தவிர வேதாத்ரி மகரிஷியின் மன வளக்கலை மன்றத்தின் மூலமாக எல்லா மாணவர்களுக்கும் தியான வகுப்பு பள்ளியிலேயே வந்து பயிற்றுவிக்கவும் ஏற்பாடு செய்திருந்தார். இவையெல்லாம் எங்களின் படிப்பிற்கு துணைபுரிவதொடு நல்ல பண்பாளர்களாக உருவாக்கும் என்று நம்பினார்.

ஆண்டு இறுதி தேர்விற்கு முன்பாக ஒவ்வொரு மாணவ மாணவியரின் வீட்டிற்கு சென்று அவர்களின் பெற்றோரை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். சின்ன குக்கிராமத்தில் மாணவர் வீடு இருந்தாலும் அந்த பகுதிக்கு பேருந்தில் சென்று பின் வாடகை மிதிவண்டியில் அந்த மாணவரின் வீடு சென்று பெற்றோரை சந்திப்பார். படிப்பில் அந்த மாணவன் எப்படி இருக்கிறான் என்பது பற்றியும, பெற்றோரின் பொறுப்பிலிருந்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு விளக்குவார். அப்படி ஒரு நாளில் அவர் என் வீட்டிற்கு வந்தபோது என் அம்மாவைதான் சந்திக்க முடிந்தது. நான் என்ன படிப்பு படித்து கொண்டிருக்கிறேன் என்று கூட சொல்ல தெரியாத என் தாயிடம் பொறுமையாக விளக்கிச்சென்றார் அய்யாவு அய்யா.

இன்றளவும் எனக்கு சின்ன வருத்தம். இவ்வளவு சிறப்பாக பணியாற்றிய உங்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைக்கவில்லை என்று. ஆனால் அதையெல்லாம் மிஞ்சியதாக உங்கள் மாணவர்களின் மனதில் இன்றும்  வாழ்கிறீர்கள் அய்யா.

இன்று நீங்கள் இவ்வுலகில் இல்லாவிட்டாலும் , இப்போதும் எங்களுடனிருந்து வழிநடத்துவதாகவே உணர்கிறேன். நீங்கள் எங்களை செதுக்கிய சிற்பி அய்யா.   உங்களால் நாங்கள் முழுமையானோம்.


                                                                                          தீபாவளி நல்வாழ்த்துக்களுடன்
                                                                                          பா.பாலகுமார்
   
 

பழுதான பாலம் - ராகவன் கவிதை

ஒரு சில கவிதைகள் பெரிய வார்த்தை பிரயோகங்கள் இல்லாவிட்டாலும் கூட மனதை கவர்ந்து விடுகின்றன. அந்த வகையில் ராகவன் என்பவரின் கவிதை ஒன்றை அவரின் தளத்தில்(http://koodalkoothan.blogspot.in) கண்டேன்.

எந்த விளக்கமும் தேவைபடாத எல்லோருக்கும் புரியும்படியான கவிதைகளுக்கு என்றுமே மவுசு அதிகம் தான். ஒருவனின் பயத்தை அழகுத்தமிழில் அவர் சொல்லியிருக்கும் விதம் மெச்சும்படி இருக்கிறது.

உங்களுக்காக அவரின் கவிதையை இங்கே பகிர்கிறேன்.
 

பழுதான பாலம்

பழுதான பாலம் என்று
தான் தோன்றுகிறது
அப்புறத்திற்கு கொண்டு சேர்க்குமா
என்று தெரியவில்லை
 
கடக்காமலே பார்த்துக் கொண்டிருந்ததில்
எதிரில் ஒருவர் கடந்து கொண்டிருந்தார்
விரைந்து கடந்தால் இருவரை
தாங்குமா என்று சந்தேகம் வந்த்து
கொஞ்சம் காத்திருந்தேன்

ஏதோ பேசிக் கொண்டே வந்தஇரண்டு பேர்கள் கடக்க
ஆரம்பித்தார்கள்
நானும் சேர்ந்து கொண்டால்
பிடித்திருக்கும் கயிறுகள் அறுபடலாம்
அல்லது பாலத்தின் பலகைகள் முறியலாம்
மறுபடி காத்திருந்தேன்
அவர்கள் என்னை வேடிக்கையாய்
பார்த்து கடந்து சென்றார்கள்

இப்போது பாலத்தில் யாருமில்லை
தனியாய் கடக்க தயக்கமாய் இருந்தது
திரும்பவும் ஊருக்குள் நகர்ந்து
வேற்று வழி இருக்கா என்று
விசாரிக்க ஆரம்பித்தேன்.

 
நன்றி ராகவன்

ராகவனின்   இன்னும் சில கவிதைகளை கூடல் கூத்தன் என்னும் வலைத்தளத்தில் வாசிக்கலாம்.
 

நீரின்றி அமையாது உலகு!!

" நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு " 



விளக்கம் :
                       எவ்வகையில் உயர்ந்தவரும் நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது . அதுபோலத் தண்ணீரின் இடையறாத ஓட்டமும் மழை பெய்யவில்லை என்றால் இல்லையாகும்.
 
 
 
இந்த குறளுக்கும் நான் சொல்ல வரும் விசயத்துக்கும் நீங்களே முடிச்சு போட்டு கொண்டால் எனக்கு வசதிதான்.
 
இன்று காலை அலுவலகம் கிளம்பி வந்து எனது வாகனத்தை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அதை நிர்வகிக்கும் அம்மாவிடம் அன்றைய தினத்துக்கான கட்டணத்தை கொடுத்துக்கொண்டிருந்தேன். அதே சமயத்தில்  ஒரு பெண் தனது வாகனத்தை நிறுத்திக்கொண்டிருந்தாள். பார்க்க அழகாக இலட்சணமாகத்தான் இருந்தாள். (வீட்ல சொல்லிடாதீங்க).  
 
வண்டியை நிறுத்தியவுடன் அருகில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு பெண் குழந்தையின் அருகில் சென்று அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். அந்த பார்கிங்கை நிர்வகிக்கும் அம்மாவின் பேத்தியாக இருக்ககூடும்.  மேல்சட்டைகூட கூட அணியாமல் , தலை முடி கொஞ்சம் செம்பட்டையாக  இருந்த அந்த குழந்தையிடம் அப்படி என்ன பேச இருக்கிறது என்று சிந்தித்தவாறே கடந்து வந்தேன்.
 
இப்படிதான் என்னைபோலவே நம்மில் பலரும் மனது ரசிக்கும் எதையுமே கண்டும் காணாமலும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இந்த பெண்ணை போன்ற  மிகச்சிலரே வாழ்வில் கடந்து போகும் அனைத்து சின்ன சின்ன சந்தோசங்களையும் நின்று ரசித்து விட்டு கடந்து செல்கிறார்கள். 
 
இதே போல இன்னொரு சம்பவம். ஒரு நாள் அலுவலகம் விட்டு வீடு செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். எதேச்சையாக என் பார்வை திரும்பிய  திசையில் ஒரு அழகான காட்சி. அங்கும் கூட அழகான பெண் தான்.(பரவாயில்லை விடுங்க நானே வீட்ல சொல்லிக்கிறேன்). பாதையில் சென்ற பூனை ஒன்றை மடியில் தூக்கி வைத்து அதன் முதுகில் தடவி கொண்டிருந்தாள். அந்த பூனையும் வாஞ்சையுடன் அவள் கைகளில் சுருண்டிருந்தது.  திடீரெனெ ஏதோ ஞாபகம் வந்தவளாக தனது கைப்பையை திறந்து தனது லஞ்ச் பாக்ஸ் -ஐ வெளியிலெடுத்து அதிலிருந்து சிறிது தயிர் சாதத்தை எடுத்து பூனைக்கு வைத்தாள். அதுவும் நாக்கை சுழற்றி தின்று தீர்த்தது.
 
நம்மை சுற்றி இருக்கும் உலகம் மறந்து , அதன் கூரிய கண்களின் ஏளன பார்வையை எல்லாம் சட்டை செய்யாத , அந்த பெண்ணின் இந்த செய்கை என்னை வியப்பில் ஆழ்த்தியது.  எல்லோருக்குள்ளும் இதைபோன்று மெல்லிய மனது உயிர்ப்புடனும் ரசனையுடனும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் நினைப்பதை செயலாக்கி ரசித்து கடந்து செல்ல ஒரு தன்னிலை மறந்த  நிலைக்கு தங்களை உட்படுத்த தயங்காத ஒரு சிலராலேயே முடியும். அதோடு இல்லாமல் அதற்கு ஒரு அசாத்தியமான தைரியமும் கூட வேண்டும்.
 
இந்த நிலைக்கு அல்லது ரசனைக்கு தங்களை உட்படுதிக்கொள்வதில் ஆண்களை  விட பெண்களே சிறந்தவர்கள் என இந்த இரு பெண்களும் எனக்கு உணர்த்தி சென்றார்கள்.
 
ஒரு சிலரை கவனித்து இருக்கிறேன், பேருந்திலோ அல்லது ரயிலிலோ பயணிக்கும்போது கைகுழந்தைகள் சில சமயம் நம் முதுகு தொட்டு திருப்பும், அவர்கள் திரும்பி பார்த்து சிரித்து கூட வைக்காமல் வெற்றுபார்வை ஒன்றை வீசி விட்டு கொஞ்சம்  நகர்ந்து நிற்பார்கள்.    
 
இந்த சம்பவங்களை அசை போட்டுகொண்டு  அலுவலக வாயிலை நெருங்கும் போது எங்கள் அலுவலக சுற்று சுவரின் அருகில்  குடிநீர் செல்லும் குழாயில்  உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருமளவில் வீணாக பாதையில் வழிந்தோடி கொண்டிருந்தது . அந்த பாதை ஒரு சிற்றோடையாகவே  மாறியிருந்தது. எல்லோரும் தங்கள் உடுப்பு நனையாமல் தூக்கி பிடித்துக்கொண்டு அலுவலகம் செல்லும் அவசரத்தில் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நானும் அவ்வாறே கடந்து என் அலுவலகம் வந்து இருக்கையில் அமர்ந்தேன்.
 
வந்து அமர்ந்ததும் முதல்  வேலையாக பெங்களூர் மாநகர குடிநீர் வடிகால் வாரியத்தின்  தொலைபேசி எண்ணை இணையத்தில் தேடி பிடித்து அவர்களை தொடர்பு கொண்டு முறையீடு பதிவு செய்தேன். சிறிது நேரம் கழித்து  ஒருவர் என் கைபேசியில் அழைத்து விவரம் கேட்டார். சொல்லி முடித்ததும் ஆள் அனுப்பி சரி செய்கிறோம் என்றார்கள். அழைப்பை துண்டித்தவுடன்  ஒரு ஆத்ம திருப்தியை உணர்தேன்.
 
நாம் எல்லோருமே  இதையெல்லாம் கவனித்து சொல்ல யாரவது இருப்பார்கள் நம் வேலை  இதுவல்ல என்று தான் ஒவ்வொரு நாளும் இதுபோன்ற நிகழ்வுகளை கண்டும் காணாமலும் கடந்து செல்கிறோம்.  இதே மன நிலையில் தான் எதோ ஒரு சாலை  விபத்தின் போதும் கடந்து செல்கிறோம். குறைந்த பட்சம் ஆம்புலன்ஸ் அல்லது காவல் நிலையத்திற்கு தகவல் தருவது கூட யாராவது பார்த்து கொள்வார்கள் என்று நடையை கட்டுகிறோம்.    
 
நம்பினால் நம்புங்கள் இந்த பதிவின் தலைப்பிற்கும் நான் இங்கே பகிர்ந்த விசயங்களுக்கும்  சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, இந்த திடீரென்ற  சமூக அக்கறைக்கும்(Social Responsibility -ங்கோ),   நான் ரசித்து கடந்து வந்த அந்த இரு பெண்மணிகளின் இரசனை மிகுந்த அந்த நிகழ்வுகளுக்கும் நிச்சயம் தொடர்பிருக்கிறது.
 
                                                                                              இன்னும் பேசலாம்!!
 

எதிர்பாட்டு


சில சமயங்களில் சின்ன சின்ன சம்பவங்கள் கூட மறக்க முடியாத நினைவுகளாகி விடும்.
அதுவும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு, நட்சத்திரங்கள் வானில் சிதறி கிடப்பது  போல எண்ணிலடங்கா நினைவுகள் சிதறுண்டு  கிடக்கும். என்னுடைய ஊர் திண்டுக்கல் மாவட்டத்தில்  பொன்னம்பட்டி என்ற குக்கிராமம்.  எல்லோரும் ஏதோ ஒரு வகையில் சொந்தங்களாக இருப்பார்கள். எதிர்படுபவர்களை மாமாயி(மாமா),  அண்ணா, சின்னாயி(சித்தி), பெத்தியா(பெரியப்பா) என்று உறவு சொல்லி அழைத்து இரண்டு நிமிடங்கள் நின்று  பேசாமல் போக முடியாது. வீடுகளில் எல்லாம் தெலுங்கு தான் பேசுவார்கள். எங்கள் தலை முறையில் தான் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக
ஆட்கொண்டு விட்டது.

நிறைய பண்ணையகாரர்களும் பண்ணையங்களும் எங்கள் ஊரில் இருந்த காலம்.
சுமாராக 80க்கும் 90க்கும் இடைப்பட்ட காலம். ஒவ்வொரு பெரிய பண்ணயதிற்கும் பண்ணையாள் ஒருவர் வேலைக்கு இருப்பார். ஒரு சில
பெரிய பண்ணையங்களில் பண்ணையாளை  குடும்பத்துடன் வேலைக்கு
அமர்த்தியிருப்பார்கள். தோட்டங்களிலேயே பண்ணையாட்களின் குடும்பத்திற்கு வீடு இருக்கும்.

கிட்டத்தட்ட முழுநேர (24/7) வேலைதான். பகலில் ஆடு மாடுகளை மேய்த்து
பட்டியில் அடைத்து விட்டு இரவு தோட்டத்தில் தண்ணீர்  பாய்ச்சுவார்கள். நள்ளிரவு தாண்டி பின்னிரவு நேரங்களில் தான் பம்பு செட்களுக்கான  3 phase மின்சாரம் இருக்கும் என்பதால் அதுவே அந்த வேலைக்கான  சரியான தருணமாக இருந்தது.


பின்னிரவு நேரங்கள் தான் எல்லோரும் அயர்ந்து தூங்கும்  நேரம்.  இந்த நேரங்களில் தனியே  விழித்து வேலை செய்வது என்பது ஒரு தண்டனை தான். சின்னதாக சரக் என்று சத்தம் கேட்டாலும் உயிர்  போய் உயிர் வரும் .
பாம்பாக இருக்குமோ இல்லை வேலியில் மேயும் ஒடக்கானாக இருக்குமோ என்று மனது அச்சப்பட்டு பின் ஆறுதல் சொல்லிக்கொள்ளும் .
சின்ன வயது முதல் கேட்டு படித்து  நம்பிய நம்பாத பேய் கதைகளெல்லாம் ஞாபகத்தில் வந்து பயமுறுத்தும் . தூக்கமும்  வந்து  கண்ணை  கட்டும்.

இந்த பயத்தையும் தூக்கத்தையும் விரட்டி அடிக்க இந்த பண்ணை ஆட்கள்
கையாண்ட யுக்தி என்னை மிகவும் கவர்ந்தது. பக்கத்து பக்கத்து தோட்டங்களில் தண்ணீர் பாய்ச்சும் இருவர் சேர்ந்து கொண்டு பாடல்கள் பாடி அசத்துவார்கள். பக்கத்து தோட்டம் என்றால் அரை கிலோமீட்டர் முதல்
ஒரு கிலோமீட்டர் இடைவெளி இருக்கும்.

ஒருவர் இங்கிருந்து பாட அதைகேட்டு இன்னொருவர் எதிர்பாட்டு பாடுவார். திரைப்பட பாடல்களும் சில நேரம் மேடை நாடக பாடல்களும் எடுத்து விடுவர்.
உற்று கேட்டால் இருவரின் பாடல்களிலும் நையாண்டியும்  நக்கலும் ஒளிந்து இருக்கும்.  நேரம் ஆக ஆக அந்த பாடல்களில் இவர்களின் சொந்த மெட்டுகளும் வரிகளும் கலந்து  கேலி பேசும். அவர்களின் தூக்கம் விரட்டி நம் தூக்கத்தையும் கலைத்து விடுவார்கள்.

காலபோக்கில் விவசாயமும் நலிந்து  பண்ணையாட்களும் நகரப் பணி தேடி ஓடியதில் இதை நான் கதையாக சொல்ல வேண்டிய நிர்பந்தம்.

இன்னும் பேசலாம் .... 

மழை வாசம்


வானவில்லின் வர்ணங்கள் மறந்தே போய்விட்டது
இடிக்கும் மின்னலுக்கும் பயந்து வெகு நாளாகிவிட்டது
ஒழுகும் கூரை வேய அவசியமே இல்லாமல் போனது

அடித்துப் போன மழையின் மிச்சத்தில்
காகித கப்பல் மிதத்தி பல காலம் ஆயிற்று
வீட்டின் பின்னால் கேட்கும்
ஓடையின் சலசலப்பும் தவளை சத்தமும் கூட நினைவில் இல்லை

அடைமழை தந்த விடுமுறையும் இல்லை
வெளிச்சம் தேடி வந்த ஈசலின் சிறகும் மிச்சமில்லை
கூரையில் வழிந்தோடும் மழைநீரில்
கை நனைத்த ஜில்லிப்பு மட்டும் இன்னமும் மங்கலாய்!!