வானம்பாடி

வானம்பாடிக்கு இப்போது தான் சிறகுகள் முளைத்துக்கொண்டிருக்கிறது. அது என்ன வானம்பாடி?  இதை படித்து முடிக்கும்  போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

என்னுடைய ஊர் திண்டுக்கல் மாவட்டம் , R .வெள்ளோடு கிராமத்தில் இருக்கும் பொன்னம்பட்டி என்ற  சிற்றூர். மொத்தமாக 45குடும்பங்கள் இருக்கும்.  எனது ஊருக்கும் எனக்குமான தொடர்பு அறுந்து போய் 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 1999 நான் கல்லூரி இறுதியாண்டு படித்து கொண்டிருக்கும்போது எங்கள் பூர்வீக வீடு மற்றும்  கொஞ்சமாய் இருந்த நிலங்களை விற்றுவிட்டு  ஊரை காலிசெய்துவிட்டு  வந்துவிட்டோம். எனக்கு இயல்பிலேயே என் ஊரின்மீது கொஞ்சம் பற்று அதிகம். வீடு இல்லை என்றாலும் நண்பர்கள் மற்றும் சொந்தங்களுடன் தொடர்பில் இல்லாமல் இல்லை. 

கடந்த வருடம் 2016 டிசம்பர் மாதத்தில் எல்லோரும் போல் ஊருக்கு ஒரு WhatsAap குழு இருக்க வேண்டும் என்று தோன்றவே ஒரு குழு ஆரம்பித்தோம். அவர்களுக்கு வரும் செய்திகளை அப்படியே அங்கும் இங்கும் திருப்பி அனுப்பிக்கொண்டிருந்த நண்பர்களை தமிழ் keyboard வைத்துக்கொண்டு அவர்களது சொந்த எண்ணங்களை பகிர்ந்து கொள்ள பழக்கப்படுத்தினோம். கொஞ்ச நாள் கழித்து ஊரில் மரக்கன்றுகள் நடலாம் என்று ஒருநாள் பேச்செடுத்தபோது தண்ணீருக்கே டேங்கரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம்  மரம்  நடலாம் என்று வந்து விட்டாயே  என்று நண்பர்கள் சொன்னார்கள். அப்போது தான் ஊர் நிலவரமே புரிய ஆரம்பித்தது.

தண்ணீர் பிரச்சனையை முதலில் தீர்க்கவேண்டும் என்று நண்பர்கள் அனைவரும் பேசி முதல்வர் தனிப்பிரிவில் ஒரு புகார் கொடுத்தோம். காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் பயன்பெற்று கொண்டிருந்த எங்கள் ஊருக்கு தண்ணீர் வருவது தடைபட்டுபோனது என்றும் அதை மீண்டும்  வரும்படி ஆவண செய்ய புகாரில் கேட்டு கொண்டோம். மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அந்த புகார்மனு அனுப்பப்பட்டு வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஊருக்கு  வெளியில்  ஆழ்குழாய் கிணறு அமைத்து கொடுத்து குடிதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.

தண்ணீருக்கு இனி  ஒன்றும் பிரச்சனை இருக்காது என்ற சூழ்நிலையில் பின் மீண்டும் ஊரில்  மரம் நடலாம் என்ற பேச்செழுந்தபோது அனைவரும் நடலாம் என்று ஆர்வமுடன் முன்வந்தார்கள். 

எங்கள் பகுதியில் மட்டுமில்லை தமிழகம் முழுவதும் உயிர்வேலிகளை அழித்து கம்பிவேலிகளை அமைத்ததில் நாம் காலி பண்ணிய மரங்களை திரும்ப உண்டுபண்ண  இன்னும்  15  வருடங்களாவது  பிடிக்கும் . மனிதனை போல இந்த சுற்றுசூழலை சீரழித்தது வேறு எந்த உயிரினமும் இருக்க முடியாது. மரங்களின் அவசியத்தை எல்லோரும் உணர ஆரம்பித்தது மட்டுமில்லாமல் வறட்சியின் பிடியில் இருந்து கொஞ்சமேனும் மீளவேண்டும் என்ற ஆர்வம் எல்லோரிடமும் இருந்தது. அந்த ஆர்வம் குறைவதற்குள்  மரங்கள் நட்டுவிட வேண்டும் என்று விநாயகர் சதுர்த்தி அன்று ஏற்பாடு   செய்யப்பட்டது.

எங்கள் ஊரில் எந்த பணி  செய்தாலும்  உருப்படியாக செய்யவேண்டும் என்று நினைப்பார்கள் .  மரக்கன்றுகளுக்கு  சொட்டுநீர்  அமைத்து  கன்றுகளை பாதுகாக்க வலைகள் அமைக்க  முடிவு  செய்தொம் .  அதற்கு கொஞ்சம் நிதி அதிகம் தேவைப்பட்டபோது அனைவரும் தாங்களாகவே முன்வந்து நிதியளித்தார்கள்.  பொறுப்புகளை தனியாக பிரித்துக்கொண்டு அனைத்து ஏற்பாடுகளையும் கச்சிதமாக செய்து முடித்தனர்.

மரக்கன்றுகளுக்காக வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு பரமசிவம் அவர்களை அணுகியபோது 250 கன்றுகளை அனுப்பிவைத்தார்.  விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு பூஜை செய்து விட்டு மரக்கன்றுகள் நடும் பணி  ஆரம்பித்தோம்  . 100 நாள் பணியாளர்களை கொண்டு குழிகள் அமைக்கப்பட்டு  தயார்நிலையில் இருந்தது. மரம் நடு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பெண்கள் உணவு சமைத்து பரிமாறினார்கள். இரண்டு நாட்களில் 170 மரக்கன்றுகள் நடப்பட்டது  சொட்டுநீர் மற்றும் , கூண்டுகள் அமைக்கும் பணியும் நிறைவடைந்தது. 






இது பற்றிய செய்திக்குறிப்பு  நியூஸ்7 தொலைக்காட்சியில் வந்தது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

இதில் வேடிக்கை  என்னவென்றால்  இயற்க்கையின் கருணையில் இந்த வருடம் பெய்த  வெப்பசலன மழை எங்கள் பகுதிக்கு சிறப்பான மழையை தந்து சென்றது. இது நாள் வரை பெரிதாக கன்றுகளுக்கு  தண்ணீர் விட வேண்டிய அவசியமே  வரவில்லை.  அப்போது நட்ட பூவரசன் , புளிய மரக்கன்றுகள் வலையை தாண்டி உயரமாக வளர்ந்திருக்கிறது. 

அதன் தொடர்ச்சியாக பக்கத்து ஊரான அய்யம்பட்டியிலும் மரக்கன்றுகள் நடப்பட்டது. R .வெள்ளோடு  கிராம அளவில் இளைஞர்களிடைய ஒரு புரிதலை கொண்டுவந்தது.  வறட்சியால் அழிந்துகொண்டிருக்கும் விவசாயத்தை மேம்படுத்த அனைவரும் இணைந்து செயல்படுவது என்று முடிவு செய்தோம். அப்போதுதான் திண்டுக்கல் மாவட்ட வேளாண் அதிகாரி திரு.X .பிரிட்டோராஜ் அவர்களின் தொடர்பு கிடைத்தது. அவர் நீர்மேலாண்மை சம்பந்தமாக பல பகுதிகளுக்கு சென்று பயிற்சிவகுப்பு நடத்துவதை அறிந்தோம். எங்கள் பகுதிக்கு பயிற்சியளிக்க  வரமுடியுமா என்று கேட்டபோது மகிழ்வுடன் வர சம்மதித்தார். எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் விவசாய சமூகத்திற்கு நீர்மேலாண்மை தொழில்நுட்பங்களை தமிழ்நாடு முழுவதும் பயணம்  செய்து பயற்சியளித்துக்கொண்டிருக்கிறார். 

2017 அக்டோபர் 21ஆம்  தேதி  அன்று R.வெள்ளோட்டில் ஒரு திருமண மண்டபத்தில் "நீர்மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம்" என்ற தலைப்பில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம். அப்போதுதான் கிராம அளவில் அனைவரும் ஒன்றிணைந்து இயங்க வானம்பாடி என்ற ஒரு அமைப்பை உருவாக்கினோம். 
எங்கள் பகுதியில்  இயற்கை விவசாயதில் முன்னோடிகளாக இருக்கும் திரு.பிரதீப்குமார் ரங்கமலை ஆர்கானிக் பார்ம்ஸ் மற்றும் திருமதி.சரோஜாகுமார் அவர்களையும் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருந்தோம். மற்றும் எங்கள்பகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு பரமசிவம் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் ஒரு இயற்கை ஆர்வலர் என்ற முறையில்தான் அழைப்பு விடுத்திருந்தோம்.  

நிகழ்ச்சியன்று நாங்கள் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வேடசந்தூர் சட்டமன்ற  உறுப்பினர் திரு.பரமசிவம் கலந்து கொண்டு சிறப்பித்தார். நீர்மேலாண்மை என்ற புத்தகத்தின் ஆசிரியர் திரு.பெருமாங்குப்பம் சம்பத்து அவர்கள் கலந்துகொண்டு பேசினார். திரு.X.பிரிட்டோராஜ் அவர்கள் பள்ளி குழந்தைகளுக்கு பாடம் எடுப்பதுபோல் நீர்மேலாண்மை நுட்பங்களை  விவசாயிகளுக்கு  விளக்கினார்.    200 க்கும் மேற்கொண்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். உண்மையில் இந்த நிகழ்ச்சி எங்கள் பகுதி விவசாயிகளிடையே நீர்மேலாண்மை பற்றிய பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையில்லை. 


திரு .X .பிரிட்டோராஜ்


திரு.பரமசிவம் MLA வேடசந்தூர் 

திரு .பிரதீப்குமார் 
திருமதி .சரோஜாகுமார் 


வானம்பாடி குழு 



அதன்பிறகு   விவசாய மானியங்கள் , இயற்கை விவசாயம், மரம்வளர்ப்பு மற்றும் சொட்டுநீர் பாசனம் தொடர்பான நிறைய விவசாயம் சார்ந்த உரையாடல்களை கேட்க முடிந்தது. கொஞ்சபேர் உடனடியாக பண்ணைக்குட்டைகளும் அமைத்தார்கள். 

எங்கள் ஊர் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்திருப்பதால் இரு மாவட்ட விவசாயிகளும் பயிற்சியில் கலந்து கொண்டார்கள். அதில் கலந்துகொண்ட நண்பர்கள் சிலர் கரூர் மாவட்டம் ஈசநத்தம் பகுதியில் வரும்  பொங்கல் பண்டிகையின் போது(13/Jan/2018) இதே போன்றதொரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வேளாண் அதிகாரி திரு.பிரிட்டோராஜ் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சியளிக்க இசைந்துள்ளார்.

இந்த பயிற்சியையும் வானம்பாடி அமைப்பு தான் ஏற்பாடு செய்துகொண்டு இருக்கிறது. அதாவது வானம்பாடி என்ற  பெயரில் ஒன்றிணைந்து இருமாவட்டங்களிலும்   விவசாய  சம்பந்தமான பணிகளை முன்னெடுத்து செல்லலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

வானம்பாடிக்கு சிறகுகள் முளைக்க ஆரம்பித்திருக்கிறது. இனி அது வானில் சிறகடித்து பறக்கும்.   

-பா.பாலகுமார் 
பொன்னம்பட்டி