வாழையுடன் ஒரு பயணம்

கடந்த ஒரு வருடமாக வாழையுடன் இணைந்து பணியாற்றிகொண்டிருக்கிறேன்.  மிக திருப்தியாகவும் பெருமையாகவும் உணரமுடிகிறது.  

முதலில் வாழை பற்றி ஒரு சின்ன அறிமுகம். வாழ்க்கையில் முட்டி மோதி வெற்றிகண்ட சில முதல் தலைமுறை மாணவர்களால் உதயமானதுதான் வாழை என்ற தன்னார்வ அமைப்பு. 
கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாய் விழுப்புரம்  மற்றும்  தர்மபுரி மாவட்டங்களில்  வறுமையின் காரணமாகமும் அறியாமையின் காரணமாகவும் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி வேலைக்கு அனுப்பப்படும் சிறார்களையும் , பால்ய விவாகத்திற்கு உள்ளாகும் சிறுமிகளையும்,  முதல் தலைமுறையாய் பள்ளிக்கூடத்தை பார்க்கும் குழந்தைகளையும்  தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குறைந்த பட்சம் அடிப்படை கல்வி கிடைக்கும் வரையிலும்அதிகபட்சமாக அவர்கள் ஆசைப்படும் வரையிலும் வழிகாட்டி கொண்டிருக்கிறது வாழை.  
இப்போது 300க்கும் அதிகமான உறுப்பினர்களோடும் 500 க்கும் மேலான ஆதரவாளர்களுடனும் சென்னையிலிருந்தும் பெங்களூரில் இருந்தும் இயங்கி கொண்டிருக்கிறது.
நாம்  இந்த சமூகத்துக்கு  ஏதாவது திருப்பி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்த போதெல்லாம் , நாம் என்ன பெரிதாக சாதித்து விட்டோம். இதற்கெல்லாம் இன்னும் காலம் இருக்கிறது  என்று  தோன்றியது உண்மைதான். ஆனால் வாழையுடன் இணைந்தது பணியாற்ற தொடங்கியதும்  இத்தனை நாட்களை வீணடித்து விட்டோமே என்று தோன்றியது. 
உண்மையில் நாம் இப்போது  எந்த நிலையில் இருந்தாலும், நாம் கை கொடுத்து தூக்கிவிட நிறைய கரங்கள் காத்து கொண்டேதான் இருக்கின்றன.  நம்மில் பலரும் வாழ்வின் வெவ்வேறு சந்தர்பங்களில் யாரோ ஒருவரின் கரம் பற்றி  மேலே வந்திருப்போம். வழிகாட்டுதலுக்கு காத்திருக்கும் கரங்களையும், இந்த சமூகத்திற்கு ஏதாவது திருப்பி கொடுக்க நினைக்கும் கரங்களையும்  இணைக்கும் பணியையும் அதற்கான களத்தையும்  ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது வாழை.
வாழையின் வழியாக நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் இதுதான். நாம் என்னவெல்லாம் பெற்றிருக்கிறோமோ அவை எல்லாமே இந்த சமூகத்திலிருந்து எடுத்துகொள்ளபட்டதுதான். இந்த பிரபஞ்சம் தோன்றியபோது ஏழை , செல்வந்தன், படித்தவன் , படிக்காதவன் என்று   எந்த ஏற்றத்தாழ்வுகளும் இருந்திருக்க வாய்ப்பில்லை. காலபோக்கில் சாமார்த்தியம், தந்திரம், திறமை,  வாய்ப்பு , குரோதம் , பொறாமை , பகைமை , துரோகம் இன்னும் பல குணங்கள் மனிதனுள் வளர்ந்து இந்த உலகத்தை தலைகீழாக புரட்டி போட்டு விட்டது. இந்த ஏற்றதாழ்வுகள்  எல்லாம்  நல்லவைகளும்  , கெட்டவைகளும்  இணைந்தே சாத்தியமாகியிருக்கிறது.
இப்படி மாறிப்போன உலகை கொஞ்சமேனும் சமநிலைபடுத்தும் முயற்சியில் தான் வாழை இயங்கிகொண்டிருக்கிறது. 
இந்த முயற்சியில் வாழை எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறது என்று கேட்டால் பதில் தேடுவது சிரமமாகத்தான் இருக்கும். கண்டிப்பாக பல மாணவர்கள் அடிப்படை கல்வி  மற்றும் அதற்கும் மேலாக பயின்று நல்லவிதமாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வாழை உதவியிருந்தாலும் இந்த சமுதாயத்தை சீர்படுத்தும் முயற்சியில் எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறது என்று கேட்டால் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் இதை அளவிடுவது கடினம்.
ஆனால்  கடந்த மாதம் விழுப்புரம் எரியூரில் நடந்த பயிற்சிப்பட்டறையில் இதற்கான விடையும்  கிடைத்தது.  அப்போது வாழை மாணவர்களின் பெற்றோர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யபட்டிந்தது. அதில் ஒரு மாணவியின் தந்தை சொன்ன  அனுபவத்தில் தான் அதற்கான பதில் ஒளிந்திருந்தது.
"எனக்கு  இப்போது வயது 37 ஆகிறது. 17 வயதில் திருமணம் செய்து வைத்தார்கள். அப்போது என் மனைவிக்கு  13 வயது. வாழ்க்கையை எப்படி தொடங்குவது என்று தெரியாமல் விழி பிதுங்கி பல  துன்பங்களுக்கு உள்ளானேன்.  எனக்கு மூன்று பெண்குழந்தைகளும் ஒரு பையனும் இருக்கிறார்கள். முதல் பெண் வாழை மாணவியாகி இப்போது ஒன்பதாம் வகுப்பில்."
மேலும் அவர் சொன்னது "வாழை என் குழந்தையின் வாழ்க்கையில் மட்டும் மாற்றத்தை கொண்டுவரவில்லை. என் வாழ்க்கையிலும் பெரிய மாற்றத்தை தந்திருக்கிறது" என்று அவர் சொன்னது இதுதான்.
*நான் எப்படி குழந்தைகளிடம் பேச வேண்டும் , நடந்துகொள்ள வேண்டும் என்பதை கற்றுகொடுத்திருக்கிறது வாழை.
*மூன்று பெண் குழந்தைகள் இருந்தாலும் எல்லோரையும் அவர்கள் ஆசைப்படும் வரை படிக்க வைப்பேன்.
*என் குழந்தைகளுக்கு சிறு வயதில் திருமணம் செய்து வைத்து நான்  பட்ட துன்பத்தை அவர்களுக்கு தர மாட்டேன். 

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இருந்தது அவரின் பேச்சு. இதுதான் வாழையின் வெற்றி என்று நாங்கள் உணர்ந்த தருணம் அது.  

 
அடுத்த வருடத்திற்கான வாழை மாணவர்களுக்கு வழிகாட்டிகளை தேர்ந்தெடுக்க அறிமுக நிகழ்வுகளை பெங்களூரில் நடத்திகொண்டிருக்கிறது வாழை . நீங்களும் வாழையில் இணைய விரும்பினால்  www.vazhai.org  என்ற இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள் அல்லது 8123986750 , 9962284228 என்ற அலைபேசி எண்களில்  தொடர்புகொள்ளுங்கள்.
வரும்  ஞாயிற்றுகிழமை(13-Apr -2014) பெங்களூர் தமிழ் சங்கத்தில் நடைபெறும் வாழை அறிமுக நிகழ்வில் சந்திப்போம்.
வாருங்கள் நம் வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்வோம்.